பள்ளிப்பட்டு, மார்ச் 19: பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது குறித்து கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.
குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்ததால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் நேற்று பள்ளிப்பட்டு- நகரி பிரதான சாலையில் காலி குடங்களுடன் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வந்து மறியல் செய்த பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.இதை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.