முஷ்ணம், பிப். 15: முஷ்ணம் பகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பிரதம மந்திரியின் விவசாய கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறக் கூடிய பயனாளிகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை கணினி மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த பணிகள் எந்த அளவில் நடந்துள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் ஆய்வு செய்தார். சோழத்தரம், நந்தீஸ்வரமங்கலம், பாளையாங்கோட்டை, தேத்தாம்பட்டு, முஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனையடுத்து முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் புகழேந்தி, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சாமிக்கண்ணு ஆகியோரிடம் பணி நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது, , சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், பொது மண்டல துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.