புதுக்கோட்டை, ஜன.18: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் பொன்னரங்க தேவாலயத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் உள்பட 69 சமூகத்தை சேர்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.தை திருநாள் பொங்கல் பண்டிகை தமிழர்களின் திருநாளாக அனைத்து மதம் மற்றும் ஜாதியினர் கொண்டாடும் விழாவாக காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை விளங்குகிறது. அனைத்து மத மற்றும் ஜாதியினர் ஒற்றுமையாக விளங்க வேண்டும். இறந்த பிறகு அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மன், நரகம் மற்றும் சொர்க்கத்திற்கு அனுப்புவார் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், அனைவரும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகதான் மெய்வழிச்சாலை என்பது தொடங்கப்பட்டது என கூறுகின்றனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதற்கு இணங்கவும் மெய்வழிச்சாலை கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதத்தை பிரிக்காமலும் 69 சாதியினரும், சாதி மத பேதமின்றி வசித்து வருகின்றனர். இங்குள்ள சத்ய தேவ பிரம்ம குலத்தினர் ஆலயத்திலுள்ள பொன்னரங்க தேவாலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒன்றுகூடி சமத்துவ பொங்கலாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொன்னுரங்கன் தேவாலயத்தில சாலை ஆண்டவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடரந்து அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் மெய்வழிச்சாலை பொன்னுரங்கன் தேவாலாயத்திலிருந்து தீபம் காட்டப்பட்டது. தமிழகத்தில் பல பகுதியிலிருந்து வந்திருந்த 69 சமூகத்தை சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி பொங்கல் விழா கொண்டாடியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.