ராசிபுரம், டிச.11: வெண்ணந்தூர் அருகே, கூடுதல் பஸ் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அறமத்தாம்பாளையம், அலவாய்பட்டி, மாட்டுவேலம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருவதில்லை. மேலும், கூடுதல் பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கூடுதல் பஸ் வசதி கேட்டு, நேற்று இரவு வெண்ணந்தூர் அருகே அலவாய்பட்டிக்கு வந்த பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வெண்ணந்தூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.