திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட சார்லஸ் நகரில் தெருவோரம் உள்ள திறந்தவெளி கால்வாயில் குப்பை குவியலால் அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் நாட்கணக்கில் தேங்கியது. இதில், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்பேரில், நேற்று காலை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் சார்லஸ் நகருக்கு வந்து, திறந்தவெளி கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்தனர்.