×

அரசு வேலைவாய்பில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி திருநங்கை வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை1: அரசு வேலைகளில் மூன்றாம்  பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில், வரும் 17ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை சுதா தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர  பிற்படுத்தபட்டோருக்காக  சமூக இட ஒதுக்கீடும்,  பெண்கள் மற்றும்  மாற்றுத் திறனாளிகளுக்கென  சிறப்பு இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல், மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, தமிழகத்தில் 20 சதவீத மூன்றாம் பாலினத்தவர்கள் 10ம் வகுப்பு முடித்துள்ளனர். 40 சதவீதத்தினர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இந்நிலையில் அரசு வேலைகளில் அவர்களுக்கும்  சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழக அரசு வரும் 17ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...