×

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் சாவு

மீனம்பாக்கம்: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் பயணி, திடீர் மாரடைப்பால் இறந்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஹராஜ்பூரை சேர்ந்தவர் ஜாவீத் அகமது (40), தொழிலதிபர். இவரது மனைவி ஜகீரா பேகம் (37). கடந்த சில நாட்களாக ஜகீரா பேகத்துக்கு உடல் நிலை பாதித்தது. அவருக்கு சிகிச்சை அளித்தபோது, மஞ்சள் காமாலை இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து ஜாவீத் அகமது, மனைவிக்கு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை ஜாவீத் அகமது, மனைவியுடன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவர்களுடன் ஜகீராபேகத்தின் 2 சகோதரர்களும் வந்தனர்.

நேற்று காலை 7.50 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது. அதில் வந்த அனைத்து பயணிகளும் கீழே இறங்கினர். ஆனால், ஜகீரா பேகம் தூங்குவதுபோல் இருந்தார். அவரை பலமுறை எழுப்பியும் எழவில்லை. இதையடுத்து விமான பணி பெண்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். அவா்கள், ஜகீரா பேகத்தை பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

தகவலறிந்து விமான நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, விமானத்தில் இருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சடலத்தை பாதுகாப்பாக சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

Tags : Kolkata ,Chennai ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...