வேலூர், டிச.7: குடியாத்தம் அருகே காதல் தகராறில் காதலன் கண் முன்னே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா(21). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும் கீழ் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி வெங்கடாஜலபதி(22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் சரகுப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, வெங்கடாஜலபதி, பவித்ராவிடம், ‘ஏன் என்னிடம் பேசுவது இல்லை?’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் பவித்ரா ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து வலியுறுத்தவே காதலன் கண்முன்னே அருகில் இருந்த விவசாய கிணற்றில் பவித்ரா குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாஜலபதி கூச்சலிட்டார். பின்னர், அருகே உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்பு வீரரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பவித்ராவை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக வெங்கடாஜலபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.