பள்ளிபாளையம், நவ.21: பள்ளிபாளையம் அடுத்த சௌதாபுரம் அரசு பள்ளியில், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் ஒன்றியம் சௌதாபுரம் அரசு பள்ளியின் பசுமைப்படை அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணா தலைமை தாங்கி பேசினார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் வரவேற்றார். விழாவில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
மாணவ, மாணவிகள் தங்களிடம் தாழ்வு மனப்பான்மை வளரவே விடக்கூடாது. அதுபோல மற்றவர்களிடமும் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கக்கூடாது. தாழ்வு மனப்பான்மையால் துவண்டு போயிருந்தால், நமக்கு நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன் போன்ற தலைவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். நாட்டின் நலனில் மாணவர்கள் அவசியம் அக்கரை காட்ட வேண்டும். நாட்டின் தலைவர்கள் குறித்த புத்தகங்களை படித்து, அவர்களின் தியாகத்தை தெரிந்துகொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அருவங்காடு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் வேலுச்சாமி, உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.