ஓமலூர், நவ.15:டெங்கு கொசுக்களை அழிக்க, ஓமலூர் பேரூராட்சியில் ₹10 லட்சத்தில் புகை மருந்து அடிக்கும் ராட்சத இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓமலூர் வட்டாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ள இயந்திரங்களை கொண்டு, தினமும் ஒன்று முதல் 5 வார்டுகளில் புகை மருந்து அடித்து வருகின்றனர்.
இதனால் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் ஓமலூர் பேரூராட்சியில் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த, ₹10 லட்சம் மதிப்பில் கொசு புகை மருந்து அடிக்கும் ராட்சத இயந்திரத்தை வாங்கியுள்ளனர். இந்த இயந்திரம் மூலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஒரே நேரத்தில் கொசு புகை மருந்து அடிக்க முடியும். இந்த புகை மருந்து அடிக்கும் பணியை பேரூராட்சி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.