அறந்தாங்கி, நவ.15: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம் மற்றம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் இன்று (வியாழன்) காலை 10 மணிக்கு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களும் வழங்கப்படும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதுமில்லை. விருப்பமுள்ள இளைஞர்கள் இன்று (15ம்ேததி) காலை 10 மணிக்கு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.