கடலூர், அக். 17: மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நடைபெற்றது. நிரந்தர தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். முத்தரப்பு குழுக்களை உடனே அமைக்க வேண்டும். தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்ற வேண்டும். அமைப்புசாரா நல வாரியம் மூலம் பணப்பயன்களை உடனுக்குடன் கூடுதலாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் செலுத்த வேண்டும். ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச மாவட்ட கவுன்சில் தலைவர் தங்க.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, இணை பொதுச்செயலாளர் சுகுமார், மாநில துணைத் தலைவர் ராசவன்னியன், மண்டல தலைவர் பழனிவேல், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட கவுன்சில் தலைவர் பலராமன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பாட்டாளி தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக முழக்க போராட்டம் நடந்தது.