×

பெண்களிடம் செல்போன்கள் பறித்த 3 தொழிலாளர்கள் அதிரடி கைது

நாமக்கல், அக்.12: நாமக்கல் பகுதியில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து 3 பேர் கொண்ட கும்பல், தொடர்ந்து செல்போன்களை திருடி வந்தனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை, திருச்சி ரோடு, சேலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மாலை நேரங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 பெண்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் அளித்த புகார்களின் பேரில், நாமக்கல் போலீஸ் எஸ்ஐ ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம், நாமக்கல் -திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று ஒரு பெண்ணிடம், பைக்கில் வந்த 3 பேர், செல்போனை பறித்து சென்றனர்.

இதை நேரில் பார்த்த எஸ்ஐ ராமதாஸ் அவர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தார்.  விசாரணையில் அவர்கள், நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளர்களான சக்திவேல்(22), ஆனந்த், வினோத் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 5 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பெண்களிடம் திருடிய செல்போன்களை நாமக்கல் பகுதியில் உள்ள 2 செல்போன் கடைகளில் விற்பனை செய்து, அந்த பணத்தை செலவு செய்ததாக கூறினர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்