×

மனைவியை எரித்து கொன்ற கணவன், மாமியாருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வரதட்சணை வாங்கிவர மறுத்ததால் கொடூரம்

திருவண்ணாமலை, அக்.12: வரதட்சணை தர மறுத்த மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவன் மற்றும் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.திருவண்ணாமலை அடுத்த வேளையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் பாலு(32), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா(29). காதல் திருமணம் செய்த, இவர்களுக்கு, ராஜேஸ்வரி(9), அபி(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், திருமணமானதில் இருந்தே மஞ்சுளாவை அவரது கணவர் பாலுவும், மாமியார் சரஸ்வதியும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. பலமுறை தாய் வீட்டுக்கு சென்று, நகை மற்றும் பணத்தை வாங்கி வந்து கொடுத்தார். ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு வந்தனர்.அதோடு, மாமியார் சரஸ்வதி பூர்வீக சொத்துக்களை பாகம் பிரித்தபோது, மூத்த மகனுக்கு அதிகமாகவும், இளைய மகன் பாலுவுக்கு குறைவாகவும் பங்கீடு செய்தாராம். இதை மஞ்சுளா எதிர்த்து கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 11.4.2010 அன்று இரவு இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், மஞ்சுளாவை, கணவர் பாலு சரமாரியாக தாக்கினார். மேலும், ஆத்திரமடைந்து மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றி கணவரும், மாமியாரும் தீவைத்தனர்.

இதில், பலத்த தீக்காயம் அடைந்த மஞ்சுளாவை, குடும்ப பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாஜிஸ்திரேட் முன்னிலையில், தனக்கு நடந்த கொடூரங்களை மரண வாக்குமூலமாக மஞ்சுளா அளித்தார். மேலும், குழந்தைகளின் கண்ணெதிரில் இந்த சம்பவம் நடந்ததும் உறுதியானது. இதுதொடர்பாக, தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து, கணவர் பாலு மாமியார் சரஸ்வதியை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று விசாரித்து பாலு, சரஸ்வதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். மேலும், ₹1000 அபராதமும், அதை செலுத்த தவறினால், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். தொடர்ந்து, பாலு, சரஸ்வதியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : maimier ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...