×

கிழங்குகள் தரும் நலங்கள்!

நன்றி குங்குமம் தோழி

நாம் அன்றாடம்  உண்ணும்  காய்கறிகளில்  ஏராளமான  சத்துகள்  இருக்கின்றன. அதே சமயம் மண்ணுக்குள்  விளையும் கிழங்கு வகை காய்கறிகளும் மகத்தான சத்துகளைக் கொண்டுள்ளனதான். வேரிலிருந்து சத்துகளைச் சேமிக்கும் கிழங்குவகைக் காய்கறிகள்  அதிக அளவிலான மாவுச்சத்துகளைத் தன்னுள் கொண்டுள்ளன. இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவிபுரிகின்றன. எனவே, நாம் தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

உருளைக்கிழங்கு: உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் அதிக அளவில்  சேர்த்துக்கொள்ளும் கிழங்கு வகைகளில்  முதலிடம் உருளைக் கிழங்கிற்குதான். உருளைக் கிழங்கில் அரிசியில் உள்ளதைவிட அதிகமான மாவுச்சத்து உள்ளது. இதில் மாவுச்சத்தும் உயிர்ச் சத்துகளும் உள்ளன. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது. மேலும், இதில் அதிகமான கார்போஹைட்ரேட், கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்: இனிப்புத்தன்மை அதிகம் கொண்ட இந்தக் காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை
அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.

கருணைக்கிழங்கு:  கருணைக்கிழங்கில் காரும் கருணை காரா கருணை என இரு வகை உண்டு.  அதில், பிடிக்கருணை காரும் தன்மையுடையது. காராக்கருணை சேனைக்கிழங்கு வகையைச் சார்ந்தது. இதில் வைட்டமின் சத்துகளும், மாவு மற்றும் புரதச்சத்துகளும் நிறைந்துள்ளன. கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். உடல் எடையினை குறைக்க வல்லது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயினை போக்கவல்லது. மூலநோயை விரட்டும்.

சேப்பங் கிழங்கு:  சேப்பங்கிழங்கில் நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும்  அதிகம் உள்ளன.

மரவள்ளிக் கிழங்கு: இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துகள் இதில் உள்ளன.

பனங்கிழங்கு: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் சில உயிர்சத்துகளும் உள்ளன. இது மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.

வாழைக்கிழங்கு:  வாழைத்தண்டின்  அடி வேர்ப் பாகமே வாழைக்கிழங்கு  ஆகும். வாழைத்தண்டில் உள்ள மருத்துவகுணம் இதற்கும் உண்டு.  சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். சிறுநீரிலும், வயிற்றிலும் தங்கியுள்ள கற்களை கரைத்துவிடும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உண்டு.

முள்ளங்கி: முள்ளங்கியின் வாசம் காரணமாக சிலர் அதை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் முள்ளங்கியானது மிகுந்த சத்துகளை கொண்டது. முள்ளங்கி தொண்டை சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதோடு குரலையும் தெளிவாக்கும். பசியினை தூண்டும். சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியினை சாப்பிட சிறுநீரகக் கற்கள் கரையும். அது மட்டுமில்லாமல் அதிகமான நோய் எதிர்ப்புச்சத்தியை உருவாக்கும் தன்மைக் கொண்டது. இதில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாதுஉப்புகளும் நிறைந்துள்ளன.

இஞ்சி: நமது அன்றாட சமையலில் இஞ்சி மிக முக்கியமானது. இது வயிறு சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறது. நமது சமையலில் இஞ்சியினை சேர்ப்பதால் இரைப்பையானது பலம் பெறுகிறது. இஞ்சி பசியினை தூண்டவும், கபத்தினை போக்கவும், அஜீரணத்தை குணமாக்கவும் பெரும்பாலும் பயன்படுகிறது. அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்றுவலியையும் சரிசெய்யும் தன்மைகொண்டது.

கேரட்: கேரட் வைட்டமின் ‘ஏ’, ‘கே’, ‘பி1’, ‘பி2’, ‘பி6’, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற பல்வேறு சத்துகளை தன்னகத்துள் கொண்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், இதில் புற்றுநோய் எதிர்ப்புச்சக்தி இருப்பதால் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. தினமும் ஒரு கேரட் என நாம் எடுத்துக்கொண்டால் மார்பகம், கல்லீரல்,
குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

சர்க்கரைவள்ளி:  சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவைப்படும் சத்து தேவைகள் பூர்த்தியாகும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். செரிமானச் சிக்கலைப் போக்கும்.

தொகுப்பு :  தவநிதி

Tags :
× RELATED தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!