×

கோயில் விழாவில் தகராறு ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை நான்கு பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரை, ஆக.14: மதுரையில் கோயில் திருவிழாவில் நடந்த மோதல் எதிரொலியாக நேற்று இரவு ரவுடி ஓட ஓடி விரட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் மகன் பிரவீன்(எ) பல்செட் பிரவீன் (23). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று செல்லூர் பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் விழாவில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரவீன் மற்றொரு பிரிவினரை தாக்கினார். இதனால் அவர்கள் ஆத்திரத்துடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பிரவீன் வீட்டருகே நடந்து சென்றார். அப்போது கோயிலில் தகராறு செய்த நான்கு பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை வழிமறித்தனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்தும் தனியாக வந்து மாட்டிக்கொண்ட பிரவீன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒடினார்.

ஆனாலும் துரத்தி சென்ற கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் வெட்டியது. இதில் உடலில் பல இடங்களில் பலத்த காயமடைந்த பிரவீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பிரவீன் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொலை செய்து விட்டு சென்ற கும்பலை பிடிக்க முடியாமல் பொதுமக்கள் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. அங்கிருந்தவர்கள் செல்லூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், வந்த போலீசார் பிரவீன் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த செல்லூர் போலீசார் தப்பி சென்ற நான்கு பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்