×

10 மாத குழந்தை உட்பட 3 மகன்கள் ஆற்றில் வீசி கொலை கொடூர தந்தை கைது : மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்

சித்தூர், ஆக.7: மனைவி குடும்பம் நடத்த வர மறுத்த ஆத்திரத்தில் 10 மாத குழந்தை உட்பட 3 மகன்களை ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கங்காதரநெல்லூர் மண்டலம், பாலகங்கனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி அமுதா(36). இவருக்கு குழந்தை இல்லாததால், செட்டிப்பள்ளியை சேர்ந்த அமராவதி(34) என்பவரை வெங்கடேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புனித்(6), சஞ்சய்(3), ராகுல்(10 மாதம்) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். வெங்கடேஷ் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெங்கடேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால், 2வது மனைவியான அமராவதிக்கும் வெங்கடேஷூக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மனவேதனையடைந்த அமராவதி மகன்களுடன், தாய் வீடான செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்றுவிட்டார். இதனால் நேற்று முன்தினம் வெங்கடேஷ், செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்தார். இதுதொடர்பாக இருவருக்கும் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிவரை கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, ‘நீ வராவிட்டால் மகன்களை அழைத்து செல்கிறேன்’ என வெங்கடேஷ் கூறிவிட்டு, 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.
இதையடுத்து நேற்று காலை நீவாநதிக்கரை வழியாக வந்த பொதுமக்கள், ஆற்றில் 3 குழந்தைகளின் சடலங்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கங்காதரநெல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் இருந்த வெங்கடேஷ், நீவாநதி ஆற்றில் 3 மகன்களையும் வீசிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இந்நிலையில் எஸ்ஆர்புரம் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த வெங்கடேஷை போலீசார் நேற்று மதியம் கைது செய்தனர். மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மகன்களை ஆற்றில் வீசி தந்தையே கொன்ற பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED 9 வயது சிறுவன் திடீர் தற்கொலை குடியாத்தம் அருகே அதிர்ச்சி