×

பாதத்தைப் பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் , கால்களில் பாத எரிச்சல் வரும். மேலும், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானாலும், பாத எரிச்சல் ஏற்படும். அதனால் பாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரைநோய் என எண்ண வேண்டாம். ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுப்பதால், முடக்குவாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல்  உண்டாகும்.

சில சமயம் காலில் நெருப்பை வைத்தது போல் இருக்கும். மேலும், கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி. பின் அந்த பகுதிகளில் உணர்ச்சி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும்,  பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் வருகிறது. ஆர்த்ரரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும், கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் உண்டாகலாம்.

அதுபோன்று ‘ஹைப்போ தைராய்டிசம்’ இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.

தீர்வுகள்:

மருதாணியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம்செய்து வந்தால் பாதஎரிச்சல் குறையும்.மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும். 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து குழைத்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உறங்கும் முன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும். நரம்பு சார்ந்த பிரச்னைகளாலும் பாத எரிச்சல் ஏற்படும். எனவே, தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தொகுப்பு : ரிஷி

Tags :
× RELATED மாறும் மாதவிடாய் சுழற்சி…