×

மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டம் மானிய விலையில் முந்திரி ஒட்டு செடிகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

அரியலூர்,ஜூன்20 :    மானவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் மானிய விலையில் முந்திரிஒட்டு செடிகளை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரிய வரமாகும்.  இவ்வாண்டு 2018-19ல் இத்திட்டம் ரூ.1.92 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடை பிடித்து, இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும். இவ்வாண்டு தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் முந்திரி பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.25,000 வரை மானியமாக வழங்கப்படும், மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தர நிழல் வலை கூடாரம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும். மேலும் விவசாய உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன தொழிற்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.இதனை பற்றிய தகவல் அறிந்து பயன் பெற அரியலூர் மாவட்டத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என  கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்