×

கணையப் புற்றுநோயிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுநல மருத்துவர் கு.கணேசன்

உடலுக்குள் மேல் வயிற்றில் காணப்படும் முக்கியமானதோர் உறுப்பு, கணையம் (Pancreas). இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், முதுகுப் பக்கம் ஒட்டியதுபோல், வாழை இலை வடிவத்தில் குறுக்காகப் படுத்திருக்கிறது; 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இருக்கும்.

கணையம் தலை, உடல், வால், கழுத்து என நான்கு பகுதிகளைக் கொண்டது. இதன் ஊசி வால் வயிற்றின் இடதுபுறம் இருக்கிறது; அகன்ற தலை வலதுபுறம் சிறுகுடலுக்கு அருகில் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் உடல் இருக்கிறது. தலையும் உடலும் சேருகிற பகுதிக்குக் கழுத்து என்று பெயர். தலையிலிருந்து கிளம்பும் கணைய நாளம், பித்தப்பையிலிருந்து வரும் பித்த நாளத்துடன் இணைந்து சிறுகுடலுடன் இணைகிறது.

இரட்டைச் சுரப்பி!

கணையம் ஓர் இரட்டைச் சுரப்பி. இதைக் கலப்புச் சுரப்பி (Mixed gland) என்றும் கூறுவார்கள். செரிமானத்தை இயக்கும் ‘நாளமுள்ள சுரப்பி’யாகவும், ஹார்மோன்களைச் சுரக்கும் ‘நாளமில்லாச் சுரப்பி’யாகவும் இயங்குகிறது. அது என்ன “நாளம் உள்ளது, நாளம் இல்லாதது?”.நம்மிடம் லேன்ட் லைன் போன், செல்போன் இருக்கிற மாதிரி, உடலிலும் இரண்டு வகை சுரப்பிகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு நாளம் வழியாக உடலில் ஓரிடத்தில் சுரக்கப்படும் நீரானது இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அது நாளமுள்ளது. லேன்ட் லைன் போன் மாதிரி!

கிடைக்கிற சிக்னலுக்குத் தகுந்த மாதிரி நீர் சுரந்து, நாளம் எதுவும் இல்லாமல், ரத்தத்தில் நேரடியாகக் கலந்து விடுகிறது என்றால், அது நாளம் இல்லாதது. இது செல்போன் மாதிரி! இந்த இரண்டு வகைச் சுரப்பிகளும் ஒருங்கே இணைந்துள்ள ஓர் ஆச்சர்ய உறுப்பு கணையம். கொழுப்பு உணவைச் செரிக்கும் செரிமான நீர்களைக் கணையம் சுரக்கிறது. அத்தோடு, உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினைச் சுரப்பதும் கணையமே!

கணையத்தில் புற்றுநோய்பொதுவாக, கணைய பாதிப்பை இரண்டு பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று, கணைய அழற்சி (Pancreatitis). இரண்டாவது, கணையப் புற்றுநோய் (Cancer Pancreas). இளம் வயதில் வருவது கணைய அழற்சி. முதுமையில் வருவது, கணையப் புற்றுநோய். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் கணையப் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு குறைவாக உள்ளது.

புள்ளிவிவரப்படி, கணையப் புற்றுநோய் யூரூக்வே (Uruguay) நாட்டில் அதிகம். ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் புற்றுநோய் மிக அரிதாகவே காணப்படுகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் சுமார் 5 லட்சம் பேருக்குப் புதிதாக கணையப் புற்றுநோய் வந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை சமீப காலமாக கணையப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

யாருக்கு வருகிறது?

கணையப் புற்றுநோய் பெரும்பாலும் 45 வயதுக்குப் பிறகே வருகிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே புற்றுநோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வகை புற்றுநோய் ஏற்படுகிறது. மரபணுக் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த நோய்க்கு உள்ளாவது நடைமுறை.

என்ன காரணம்?

நாட்பட்ட மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் கணையப் புற்றுநோய்க்கு வாசல்களைத் திறக்கின்றன. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவுப்பழக்கமும் மிருகப் புரதம் நிறைந்த உணவுகளும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகின்றன. மதுவினால் ஏற்படும் நாட்பட்ட கணைய அழற்சி, காலப்போக்கில் புற்றுநோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தத் தவறியவர்களுக்குக் கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது என்று எச்சரிக்கிறது, உலகச் சுகாதார நிறுவனம் (WHO). அதேபோல், உடல் பருமன் உள்ளவர்களுக்கும், ஹெச். பைலோரி (H.Pylori)  கிருமித் தொற்று உள்ளவர்களுக்கும் இந்தப் புற்று வரும் வாய்ப்பு அதிகம்.

என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

கணையம் 4 பகுதிகைளக் கொண்டது என்று ஏற்கனவே சொன்னோமல்லவா? அவற்றில் எந்தப் பகுதியில் புற்று பாதிக்கிறதோ, அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். முக்கியமானது, மஞ்சள் காமாலை. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், வைரஸ் தொற்றினால் ஏற்படும் மஞ்சள் காமாலை வேறு. கணையப் புற்றுநோயால் ஏற்படும் மஞ்சள் காமாலை வேறு. ஆனால், அநேகரும் தவறு செய்கிற இடம் இதுதான். சாதாரண தொற்றுக் காமாலை எனத் தவறாக கணித்து, ஆரம்பத்தில் நோயைக் கவனிக்காமல், நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் எனக் காலத்தைக் கடத்திவிட்டு, நோய் முற்றிய நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால், நோய் கடுமையாகி, ஆபத்தான நிலைமைக்குச் செல்கின்றனர்.

கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் புற்றுக்கட்டியால் பித்த நாளங்கள் அழுத்தப்படுவதால், கணைய நீரும், பித்த நீரும் சிறுகுடலில் கலப்பது தடை செய்யப்படுகிறது. இதன் விளைவாக வருவதுதான் இவ்வகை மஞ்சள் காமாலை. இதை ‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice) என்று அழைக்கிறோம். இதை நாட்டு வைத்தியம் சரிப்படுத்தாது. மாறாக, ‘ஸ்டென்டிங்’ (Stenting) எனும் சிகிச்சையே இதைச் சரிப்படுத்தும்.

காமாலைக்கு அடுத்ததாக, மலத்தைக் கவனிக்க வேண்டும். மலம் வெளிர் நிறத்தில் போனால் அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறி. நாட்பட்டு இந்த அறிகுறி தெரிந்தால், கணையப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுபோல், சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் கழிந்தாலும் அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறியே! வாரக் கணக்கில் இந்த அறிகுறி நீடித்தால் கணையப் புற்றுநோய் வந்திருக்க வாய்ப்பு உண்டு.

அடுத்ததொரு முக்கியமான அறிகுறி, வயிற்றில் வலி ஏற்படுவது. இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பித்து, இடது பக்க முதுகுக்குப் பரவும். வலி மிகவும் கடுமையாக இருக்கும். உறங்க விடாது. பசி குறையும். குமட்டல், வாந்தி தொல்லை தரும். உடல் எடை மளமளவென்று குறையும். ரத்த சோகை ஏற்படும். உடல் சோர்வு சிரமப்படுத்தும். வயிற்றை அழுத்தமாகத் தொட்டால் கட்டி தெரியலாம். வயிற்றில் நீர் சேரலாம்.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

கல்லீரல் செயல் திறனை அறிய அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் (LFT) தேவைப்படும். அதோடு, ரத்த அணுக்கள் பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்படும். வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்ப்பது முதல்கட்ட ஸ்கேன் பரிசோதனை. அதைத் தொடர்ந்து, ‘CECT ஸ்கேன்’ எனும் சிறப்புப் பரிசோதனையும் தேவைப்படும். இந்தப் பரிசோதனையில் கணையப் புற்று உள்ளதாகத் தெரிந்தால், பாதிக்கப்பட்ட புற்றுப் பகுதியிலிருந்து சிறிதளவு திசுவை வெட்டியெடுத்துத் திசு ஆய்வுக்கு (Biopsy) அனுப்புவார்கள்.

இதில்தான் புற்றுநோய் உறுதியாகும். இன்னும் சிலருக்கு E.R.C.P. எனும் சிறப்புப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். திசு ஆய்வுப் பரிசோதனை செய்ய முடியாதவர்களுக்கு, அவர்கள் வயிற்றில் சேரும் திரவத்தைப் பரிசோதித்து நோயைக் கணிப்பதும் உண்டு. புற்றுநோய் கணையத்தில் மட்டும்தான் உள்ளதா, உடலுக்குள் மற்ற உறுப்புகளுக்கும் பரவியுள்ளதா என்பதை அறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ‘பெட்’ ஸ்கேன் (PET scan) போன்றவையும் மேற்கொள்ளப்படும்.

என்ன சிகிச்சை?

கணையப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. நோயின் ஆரம்பநிலையில் வந்தால், ‘விப்பிள்’ ஆபரேஷன் (Whipple’s surgery) மூலம் கணையப் புற்றுக்கட்டி, அதன் அருகில் உள்ள சில பகுதிகள் மற்றும் நெறிகட்டிகளை அகற்றிவிட்டால் நோய் குணமாகும். ஆனால், கணையப் புற்றுநோயுள்ள நோயாளிகள் பெரும்பாலும் நோயின் இறுதிக்கட்டத்தில் வருவதால், 10லிருந்து 20 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படலாம்.  சிலருக்கு, அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கதிர்வீச்சு சிகிச்சை தரப்படலாம். கணையப் புற்றுநோய் உள்ளவர்களுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பது என்பது சற்றே சவாலானது. காரணம், கணையத்துக்கு அருகில் குடல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கியப் பகுதிகள் இருப்பதால், கதிர்வீச்சுகள் அவற்றைப் பாதித்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் தேவை. ஆனாலும், இப்போதுள்ள நவீன முறைகளில் துல்லியமாகக் கதிர்வீச்சுகளைச் செலுத்த முடிவதால், இந்த ஆபத்து அநேகமாகத் தவிர்க்கப்படுகிறது. ஆகவே, பயம் தேவையில்லை.

தடுப்பது எப்படி?

*மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் ஆகாது.
*கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
*மிருகப் புரதம் நிறைந்த உணவுகளையும் வயதாக ஆக குறைத்துக்கொள்ள வேண்டும்.
*உடற்பருமனைத் தவிர்க்க வேண்டும்.
*தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
*சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
*வம்சாவளியில் புற்றுநோய் வந்துள்ள குடும்பத்தினர் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒருமுறை வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
*கணையப் புற்றுநோய்க்கு CA 19-9 எனும் டியூமர் மார்க்கர் உள்ளது. இதையும் இவர்கள் மேற்கொள்ளலாம்.

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்