சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி டவர் -1ல் உள்ள 111வது வார்டில் பெண் டாக்டர் ஒருவர் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, மேஜையில் வைத்திருந்த அவரது விலை உயர்ந்த ஐபோன் மாயமானது. அதேபோல், அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் செல்போனும் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி கக்கன்ஜி நகர் அண்ணா தெருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் முனியாண்டி (42) என்பதும், இவர் நோயாளி போல் நடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் செல்போன்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே மீண்டும் மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் முனியாண்டியை நேற்று முன்தினம் கைது ெசய்தனர். விசாரணையில், பெண் டாக்டரின் செல்போனை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பெண் டாக்டரின் ஐபோன் உட்பட 2 போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.