சென்னை: அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). அறநிலையத் துறை அதிகாரியான இவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை இவர், கோயம்பேடு ஜெய் நகரில் உள்ள ஒரு சலூன் கடையில் முடி வெட்டி விட்டு, வெளியே நிறுத்தி இருந்த தனது காரில் புறப்பட தயாரானார். அப்போது, அங்கு போதையில் வந்த நபர், காரின் மீது சரிந்து, வாந்தி எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், அந்த நபரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, அருகில் இருந்த கல்லை எடுத்து ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ரவிச்சந்திரனுக்கு தலையில் 2 தையல் போடப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.