கொழும்பு: ெகாழும்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 வீடுகள் எரிந்து சேதமானது. இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜிமவட்டாவில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டப்பட்டதாகும். பெரும்பாலும் தினக்கூலிகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிறிய சிறிய வீடுகளில் இவர்கள் ஒண்டி குடித்தனம் இருந்துள்ளனர். இங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் இருந்துதான் நேற்றிரவு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவி மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 12க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது. வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.