சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை எக்ஸ்.இ வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்ப ஓவியங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 3.2 லட்சத்தில் இருந்து 3.8 லட்சம் வரை கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய திறன் உள்ளது.
கொரோனா இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் தான் பொது இடங்களில் வர வேண்டும் என டிபிஎச் ஆணையிட்டு இருந்தது. அந்த ஆணையை கடைபிடித்ததன் வாயிலாக தற்போது 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதனால், தான் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா குறைந்து விட்டதாக நினைத்து மாஸ்க் அணிய தேவை இல்லை, கைகளை கழுவ தேவை இல்லை என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. இது தவறான கருத்து. தமிழ்நாட்டை பொறுத்த வரை எக்ஸ்.இ வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
