×

வேட்புமனுவில் தவறான தகவல் அளித்த விவகாரம் ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போடி  தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிப்ரவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு  உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது.

 காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதையடுத்து, மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Banneerselvam , Candidate, O. Panneerselvam, Trial, High Court
× RELATED ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல்...