டாக்கா: வங்கதேச படவுலகில் 25 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமாக இருந்தவர், ரைமா இஸ்லாம் ஷிமு (45). ஏராளமான டி.வி தொடர்களில் நடித்துள்ள அவர், தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அவர் காணாமல் போனார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தியபோது, வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரிலுள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகில், 2 சாக்குமூட்டைகளில் ரைமா இஸ்லாம் ஷிமு பிணமாக கண்டெக்கப்பட்டார். அவரது உடலைக் ைகப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், நடிகையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும், அவர் கடந்த ஞாயிறு அன்று கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் பாலத்தின் அருகே வீசப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ரைமா இஸ்லாம் ஷிமு மரணம் தொடர்பாக அவரது கணவர் ஷகாவத் அலி நோபல் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியின் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஷகாவத் அலி நோபல் ஒப்புக்கொண்டார். தற்போது அவர் 3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டாக்கா போலீஸ் எஸ்பி மருஃப் ஹுசைன் சர்தார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவிற்கும், தனியார் டி.வி சேனல் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த நடிகையின் கணவர் ஷகாவத் அலி நோபல், இதுகுறித்து தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால், அவரது பேச்சை ரைமா இஸ்லாம் ஷிமு கேட்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த ஷகாவத் அலி நோபல், தனது நண்பர் பர்ஹாதுடன் சேர்ந்து ரைமா இஸ்லாம் ஷிமுவை வெட்டிக் கொன்றுள்ளார். பிறகு உடல் பாகங்களை 2 சாக்கு மூட்டையில் அடைத்து ஹஸ்ரத்பூர் பாலம் அருகே வீசிவிட்டு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். நடிகைக்கும், அவரது கணவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கொலை நடந்தபோது 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். கொலை செய்யும் முன்பு ரைமா இஸ்லாம் ஷிமு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.