ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் ஏர் கலப்பை கொண்டு பாரம்பரிய மரபு முறைப்படி விவசாயிகள் கடலை விதைப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாடுகளை கட்டி ஏர் ஓட்டி விதைப்பு செய்தால் மட்டுமே அதிக அளவில் கடலை விளைச்சல் வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து பெரியாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி குமார் என்பவர் கூறும்போது, தற்போது கட்டளை விவசாயம் செய்வதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதன் மூலம் விவசாயம் செய்யும்போது போதிய அளவில் மகசூல் இல்லை. மேலும் மனதிற்கான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. தனது தந்தையின் காலம் தொட்டு சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக கடலை தெரிவு செய்யும்பொழுது மாடுகளை வைத்து ஏர் உழுது, ஆட்கள் வைத்து கையால் அந்த பள்ளத்தில் கடலை விதைப்பு செய்வதன் மூலம் மட்டுமே மனநிறைவு கிடைக்கிறது. இதனால் கடலை அதிக மகசூல் கிடைக்கும். என்றார்.
அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலரும் இயந்திரங்களைக் கொண்டு கடலை விதைப்பு செய்யாமல் மாடுகளை கொண்டு ஏர் உழுது கடலை விதைப்பு செய்து வருகின்றனர். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியிலும் மாடுகளை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் குறைவே என்றாலும் மனநிறைவோடு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
