×

வைரஸ் தாக்குதலுக்கு தயாரா? அடுத்தடுத்த தொற்றுகள் கொரோனாவை விட மோசமானது: ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா எச்சரிக்கை

லண்டன்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரசால் உலகளவில் 52.60 கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் கோடி பொருளாதார உற்பத்தி அழிந்துவிட்டது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்நிலையில், தனியார் ஆங்கில சேனலில் ரிச்சர்ட் டிம்லேபி உடனான கலந்துரையாடலில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான சாரா கில்பர்ட் கூறியதாவது: வரவிருக்கும் தொற்றுகள் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானவை. இது மிகவும் மோசமானதாக, வேகமாக பரவக் கூடியதாக, அதிகளவில் மரணம் ஏற்படுத்துவதாக கூட இருக்கலாம். மக்களின்  வாழ்வாதாரம் வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை.

எனவே, அடுத்தடுத்த வைரசை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி பெறுவது வரையறைக்குள் உள்ளது. கொரோனா தொற்றை கையாள்வதை மறுபரிசீலனை செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சுகாதார நிபுணர்கள் குழுவை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பு தொற்றுநோயை எதிர்கொள்ளும் தயாரிப்புக்காக ஆண்டுக்கு குறைந்தபட்சம் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நிதி ஒதுக்கீட்டை முன்மொழிந்துள்ளது. உருமாறிய ஒமிக்ரான் ஸ்பைக் புரதத்தில் வைரஸின் பரவலை அதிகரிக்க கூடிய பிறழ்வுகள் இருக்கின்றன. இந்த புதிய உருமாறிய வைரஸ்கள் பற்றி விஞ்ஞானிகள் மேலும் அறிந்து அவை பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் வரை, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேலில் உள்ள ஹதாஷ்-ஹீப்ரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ட்ரோர் மெவோராக் கூறுகையில், `ஒமிக்ரான் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய தகவல்களின்படி, இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாகவும் அதே நேரம் அதிக ஆபத்து இல்லாததாகவும் உள்ளது. கடந்த 2 வாரங்களில் மருத்துவமனையில் சேர்ந்தவர்களில் 80 சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை. ஒமிக்ரான் கொரோனா மற்ற உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்று ஆபத்தானது அல்ல’ என்றார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று 2 பேர் ஒமிக்ரா்னால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது.

* மற்றொரு முக்கிய கட்டம்
பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `தடுப்பூசி செலுத்துவதில் நாடு மற்றொரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இது மற்றொரு முக்கிய கட்டமாகும். முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Oxford Astrogenica , Ready for a virus attack? Subsequent infections are worse than corona: Oxford Astrogenica warning
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...