சென்னை: கொரோனாவிலிருந்து நடிகர் கமல்ஹாசன் குணம் அடைந்தார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கடந்த மாதம் அமெரிக்கா சென்று வந்தார். சென்னை திரும்பியதும் அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் கமலுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த நவம்பர் 22ம் தேதி போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்றிலிருந்து கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார். டிசம்பர் 3ம் தேதி வரை அவர் தனிமையில் இருக்க வேண்டும். 4ம் தேதி முதல் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.