×

பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுக்கப்பட்டது.சிவகங்கை தொல்நடை குழுவைச் சேர்ந்த அரசனேரி கீழமேடு சரவணன், பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் வித்தியாசமான கற்கள் கிடப்பதாக தகவல் கொடுத்தார். இதனையடுத்து சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன் மற்றும் சேதுபதி, பிரவீன், கார்த்தி ஆகியோர் கண்மாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின் அவர்கள் கூறியதாவது :

பெருங்கற்காலத்தில் (கிமு 1200) இரும்பை உருக்கும் அறிவை தமிழர்கள் பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் இரும்பு உருக்கும் தொழில்நுட்பத்தை பெருங்கற்காலத்தில் மக்கள் பயன்படுத்தியது ஆய்வுகளில் தென்படுகின்றன. இங்கு தரையோடு ஒட்டியதாக வட்ட வடிவிலான உலைகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இவை பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் தண்ணீருக்குள்ளும், தரையிலும் உள்ளன. இரும்பை செம்பிராங்கல் போன்ற கல்லாலான மூலப்பொருளிலிருந்து பிரித்து எடுத்திருப்பது தெரிய வருகிறது. உலைகள் மூலம் கொதிநிலைக்கு கொண்டு வந்து கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து இருக்கலாம்.

அப்படியான குவியல்கள் இரும்பு கழிவு குவியல்களாக இங்கு காணக் கிடைக்கின்றன. சுடுமண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று கிடக்கின்றன.உலைகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்று கொண்டுபோக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம். இரும்பு கழிவுகள் நிறைந்து கிடைக்கக்கூடிய இந்த மேட்டுப் பகுதியை கல்லங்குத்தல் என பேச்சு வழக்கில் மக்கள் அழைக்கின்றனர்.

புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றாக 13ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு செய்தியும், புதுக்கோட்டை சமஸ்தான புள்ளிவிவர செய்திக் குறிப்பும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து சிவகங்கைப் பகுதியிலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்கள் வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Sivagangai: Paleolithic iron ore remains found near Sivagangai.
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...