புழல்: பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(30). சொந்தமாக கால் டாக்சி ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். செங்குன்றம் அடுத்த நல்லூர் டோல் பிளாசா அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை வழி மறித்து சவாரி வருவது போல் கேட்டு அவரை கத்தியால் தாக்கிவிட்டு, செல்போன், இரண்டாயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு கவரப்பேட்டை எஸ்ஐ ஸ்டீபன்ராஜா கவரப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் கத்தியை எடுத்து, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு, தப்பிக்க முயற்சித்தனர். போலீசார் இருவரையும் பிடித்து கத்தி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், வியாசர்பாடி தேவராஜ்(38), மணிகண்டன்(33) என்பது தெரியவந்தது.