நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக 650 முதல் 800 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிபதி நீஷ் (44), கொரோனாவுக்கு பலியானார். இவர், மதுரை அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கு முன்பு வள்ளியூர், நாகர்கோவில் மற்றும் சிதம்பரத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிபதியாக பொறுப்பேற்றார். இதனிடையே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி நீஷ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.