சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதை பார்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியார் சிலைக்கு வைக்கப்பட்டிருந்த குங்கும பொட்டு மற்றும் மாலையை அகற்றினர். இதையடுத்து பெரியார் சிலையின் கூண்டை பூட்டு போட்டு போலீசார் பூட்டினர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த நபர் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.