கோவை: தமிழகத்தில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனி விமானத்தில் கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதன்பின்னர், பீளமேடு கொடிசியா வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கவர்னர் பன்வாரிலால் முன்னிலை வகித்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- கோவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இங்கு துவக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் பாசன திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான, விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும். இத்தருணத்தில், வான்புகழ் வள்ளுவர் கூறிய ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர்’’ என்ற திருக்குறள் எனக்கு நினைவுக்கு வருகிறது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம்தான் முக்கியம். அந்த வகையில், மின்திட்டங்களை துவக்கி வைத்துள்ளதில் பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் தொடங்கப்படும் மின் திட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்படும். மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம். சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள். பா.ஜ பொதுக்கூட்டம்: இதையடுத்து, பா.ஜனதா சார்பில், கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘‘இந்த ஆண்டு, தமிழகம், புதிய அரசை தேர்வு செய்யப்போகிறது. இந்திய வரலாற்றின், முக்கியமான காலக்கட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கப்போகிறது. மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், தமிழக அரசும் கூட்டாட்சிக்கு உதாரணமாக இருக்கின்றன. தமிழக மக்கள் பயன்பெற, மாநில அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
காலில் விழுந்த ஓ.பி.எஸ். மகன்
விழா மேடைக்கு பிரதமர் மோடி வரும்போது அ.தி.மு.க. எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்தரநாத்குமார், முன்னாள் எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ேமாடி காலில் அடுத்தடுத்து விழுந்தனர். இவர்களை தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த இருவரும் ேமாடி காலில் விழத்தொடங்கினர். உடனே, மோடி தடுத்து விட்டார்.