மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு என்பது நடிகர் விமலின் சொந்த ஊராகும். இந்த ஊரில் அவரது வீட்டுக்கு முன் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஊர் மந்தை எனப்படும் இடத்தில் அப்பகுதியினர் விளக்கு தூண் அமைத்து வழிபட்டு வந்தனர். மேலும் இந்த இடத்தில் 48 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்தவர்கள் 2 அடிக்கு சுவர் எழுப்பி, மேடை அமைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 பேர் அடங்கிய ஒரு கும்பல் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து அந்த விளக்குத்தூண் மேடையை இடித்து தரை மட்டமாக்கியது. இதை தட்டிக்கேட்ட அப்பகுதியினரையும் அந்த கும்பல் மிரட்டியதாகவும், இந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விசாரணைக்காக போலீசார் விமலை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.