மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்தேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பிரதான எழுத்துத் தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். வெளியான பட்டியலில் என் பெயர் இல்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே, கல்லூரிக்கு சென்று முழுநேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் மீண்டும் விசாரித்தனர். அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில், டிஎன்பிஎஸ்சியில் கடந்த 2016 முதல் 2019 வரை நடந்த தேர்வுகளில் 85 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் எந்த வழியில் பயின்றனர் என்ற விபரம் எங்களிடம் இல்லை. சான்றிதழ்கள் அந்தந்த துறையில் தான் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழ் வழி படிப்பிற்கான இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் கடந்த மார்ச்சில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளது. எனவே, அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆளுநரின் செயலரின் தரப்பில் தெரிவிக்க வேண்டும். தமிழ் வழியில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை தாக்கல் ெசய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.