புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் நகர சுகாதார மையங்களுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொசு புழு உருவாகும் இடங்களை அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கொசு உற்பத்திக்கு வழிவகை செய்துள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மலேரியா உதவி இயக்குனர் கணேசன் தலைமையில் நகராட்சி நல அதிகாரி குமரன், பூச்சியியல் வல்லுனர் செந்தில் வேலவன் குழுவினர் மற்றும் சுகாதார உதவியாளர்கள் ஆகியோர் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையை சுற்றியுள்ள செயற்கை நீரூற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.
சுழற்சி முறையில் அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகம் நடைபெறாமல் தேங்கிக் கிடப்பதால் கொசுஉற்பத்தி அதிகமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து இக்குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு கொசு உற்பத்தியான இடங்களை அழிக்கும் பணியை மேற்கொண்டனர்.