காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டது. இதனால் மக்களுக்கு நோய்கள் தாக்கும் ஆபத்துக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவாரமாக பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பழைய ரயில் நிலையம், மாகாளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதால் தொற்று நோய் ஏற்படும் ஆபத்துள்ளது. இதுபோல் நகராட்சிக்கு உட்பட்ட மலையாளத் தெரு, பெரியார் நகரை அடுத்த அகத்தியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த பகுதியில் வசித்துவரும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், நோய் தாக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.