×

நஷ்டத்தில் இயங்கி வரும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூடுதல் ஒப்புதல்..!

டெல்லி: லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூடுதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.

தொடர்ந்து இயங்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லஷ்மி விலாஸ் வங்கியை 2019 செப்டம்பர் மாதத்தில் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவை ரிசர்வ் வங்கி  கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், வங்கி இணைப்பிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அசீம் உள்கட்டமைப்பு நிதி லிமிடெட் மற்றும் NIIF உள்கட்டமைப்பு நிதி லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட NIIF கடன் மேடையில் 6000 கோடி ரூபாய் உட்செலுத்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


Tags : Union Cabinet ,Lakshmi Vilas Bank ,DPS , Lakshmi Vilas Bank, DPS Bank, Union Cabinet, Approved
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...