சிவகங்கை: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி பட்டா பெற்ற விவகாரத்தில் தாசில்தார், ஆசிரியர், டாக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பளுவூரை சேர்ந்தவர் ராஜா. இவர் முடிக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். பளுவூர் கிராமத்தில் உள்ள 90 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதையடுத்து ஆசிரியர் ராஜா, வி.புதூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும் ராஜாவின் மகனுமான முத்தரசன், பட்டா வழங்கிய சிப்காட் நில எடுப்பு தாசில்தார் மகேந்திரன் ஆகிய மூவரையும் கலெக்டர் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.