அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுத்தது யார்
சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை, அணைக்கட்டுகள் கட்டுதல், கதவணை அமைத்தல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன்படி, ேதசிய வேளாண்மை திட்டம், வெள்ள மேலாண்மை திட்டம், நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டம் (பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜானா திட்டம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்காக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின் பேரில், மத்திய அரசு 80-20, 75-25 என்ற சதவீதத்தின் கீழ் நிதியுதவி அளிக்கிறது. இந்த நிலையில், நடப்பாண்டிலும் உலக வங்கி, நபார்டு மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியின் மூலம் 20 ஆயிரம் கோடி செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் நிதியுதவி கேட்டு நடப்பாண்டில் இதுவரை எந்தவொரு திட்டப்பணிகளுக்காகவும் ஒரு அறிக்கை கூட தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்யவில்லை. மாறாக, இந்தாண்டில் அனைத்து பணிகளிலும் கடனுதவி மூலமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் மேலிடத்தில் இருந்து தமிழக பொதுப்பணித்துறையின் அதிகாரிகளுக்கு வந்த வாய்மொழி உத்தரவையடுத்தே, மத்திய அரசின் நிதியுதவி பெற்று செய்தால் தாமதம் மற்றும் தணிக்கை போன்ற பிரச்னைகள் உள்ளதால், தமிழக அரசு தவிர்த்து விட்டதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.