சென்னை: வேளாண் மசோதாக்களை கண்டித்து தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மாவட்ட தலைவர்கள் ஜுனைத் அன்சாரி, சலீம், ரஷீத் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தாராபுர் டவரில் இருந்து அவர்கள் பேரணியாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.