ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இங்குள்ள ரேஷன் கடையை சுற்றிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில், அப்பகுதி மக்கள் நடந்து சென்று தான் ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இந்த மழைநீர் நாளடைவில் கழிவு நீராக மாறி துர்நாற்றம் வீசி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடையை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த சில நாட்களாக ஏனம்பாக்கம் கிராமத்தில் மழை பெய்ததால் அங்குள்ள ரேஷன் கடை முன்பு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில், நடந்து சென்றுதான் நாங்கள் ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்கிறோம். இதில், உற்பத்தியாகும் கொசுவால் டெங்கு, மலேரியா, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, ரேஷன் கடையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்” என்றனர்.