அபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அபுதாபி: ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ரோகித் சர்மா(12 ரன்கள்), பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்ட இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஜர்(2 ரன்கள்) மற்றும் பும்ரா(5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர்.
குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.