×

விருதுநகரில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளர்கள் 24 பேர் மீட்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே இயங்கும் பட்டாசு ஆலை ஒன்றில் சட்ட விரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 9 பேர், 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 15 பேர் என மொத்தம் 24 பேர் இன்று அதிரடியாக மீட்கப்பட்டனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாலும், பெற்றோருக்கு வேலையின்மை, குடும்ப வறுமை காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக சிறுவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆர்.ஆர். நகர் அருகே இயங்கி வரும் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 9 குழந்தைத் தொழிலாளர்களும், 15 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வயது சான்று பெறப்பட்டது. பின்னர் அக்குழந்தைகள் அனைவரும் விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய பட்டாசு ஆலை நிர்வாகத்திற்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, காவல்துறை மூலம் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : child laborers ,firecracker factory ,Virudhunagar , Fireworks factory, child labor
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...