சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசார் கன்டெய்னர் லாரி ஒன்றுக்கு அபராதம் விதித்ததால் லாரியில் ஓட்டுனருடன் இருந்த ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூரில் நேற்றிரவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வடமாநிலத்திலிருந்து கன்டெய்னர் லாரி ஒன்று அவ்வழியாக வந்துள்ளது. அப்போது அதனை போலீசார் வழிமறித்துள்ளனர். இதையடுத்து தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
பின்னர் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக சரக்கு லாரி உள்ளே வந்ததாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதனால் லாரி ஓட்டுனருக்கு போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லாரியில் ஓட்டுனருடன் இருந்த ஒருவர் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி அவரை கீழே இறக்கி விட்டனர். இதனால் கொடுங்கையூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.