சென்னை : இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.
மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி(கோமா நிலையில்) உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக் குறைவு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தறிந்தார்.அப்போது, பிரணாப் முகர்ஜி அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் எனும் தமது விழைவினைத் தெரிவித்த கழகத் தலைவர் அவர்கள், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.