சென்னை: தங்கம் விலை கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம்தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம். இந்நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.
தொடர்ந்து, 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோருக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.