சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் 25வது மாடியின் சுற்றுச்சுவரில் நடந்து இளம்பெண் சாகசம் செய்தார். சென்னையை ஒட்டிய புறநகர்ப் பகுதியான நாவலூரை அடுத்த ஏகாட்டூரில் 28 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தமிழ்நாட்டின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 1500 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் குறைந்த பட்ச விலை ரூ.1.25 கோடி. இந்த குடியிருப்பு வளாகத்திற்கு உள்ளேயே சினிமா தியேட்டர், பூங்கா, ரெஸ்டாரன்ட், விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் இந்த குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், சாகசம் செய்வதாக நினைத்து 25வது மாடிக்கு வெளியே உள்ள சுற்றுச்சுவரில் எந்த பிடிமானமும் இல்லாமல் நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த குடியிருப்பு நிர்வாகிகளிடம் கேட்டபோது, கடந்த 2 வாரங்களுக்கு முன் இச்சம்பவம் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி இல்லாததால் மாணவிகள் சிலர் இதுபோல் நடக்க முடியுமா என பந்தயம் கட்டி விளையாட்டாக செய்தனர். இதுபற்றி தெரியவந்ததும், சம்பந்தப்பட்டவர்களை கண்டித்தோம் என்றனர்.