சேலம்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 6 அடி வரை உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறப்பு காணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலை 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 70.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர், இன்று காலை 75.83 அடியாக உயர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு 37.92 டி.எம்.சியாக உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காவிரி கரையோரங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் நீர் தேக்கப் பகுதிகளில் கோட்டையூர் அடிபாலாறு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க வில்லை.